
ம இ கா ஸ்கண்டார் புத்ரி ஏற்பாட்டில் ஜொகூர்பாரு நல் உள்ளங்களின் நற்பணி சங்கம் மற்றும் பக்தி ஜெயா சமூகநல இயக்கம், ஸ்கூடாய் இணை ஆதரவோடு இடைநிலைப் பள்ளிக்குத் தயாராகும் கருத்தரங்கம் என்ற இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் தாமான் யுனிவர்சிட்டி பொது மண்டபத்தில் 22-03-2024 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற்றது. கருத்தரங்கைத் தொடக்கி வைத்து உரையாற்றிய தொகுதி ம இ கா தலைவரும், ஸ்கண்டார் புத்ரி மாவட்ட மன்ற உறுப்பினருமான உயர்திரு V. சங்கரபாண்டியன் இடைநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் தைரியமாக சவால்களை எதிர் கொள்ள இந்த விழிப்புணர்வு கருத்தரங்கம் துணை புரியும் என நம்புவதாகவும், கலந்துக் கொண்ட மாணவர்களை வாழ்த்துவதாகவும் கூறினார். தொடர்ந்து ஆசிரியர் திரு குமரன் தலைமையிலான ஆசிரியர் குழு தேசிய மொழி மற்றும் அறிவியல் பாடங்களுக்கான குறிப்புகளையும், எளிய முறையில் சவால்களை எதிர் கொள்ளும் வழியினையும் விளக்கினர். கருத்தரங்க நிறைவில் கலந்துக் கொண்ட மாநில ம இ கா தலைவரும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு K.இரவின்குமார் அவர்கள் தொடக்க பள்ளியிலிருந்து இடைநிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் புதிய சூழலில் தங்களை எப்படி நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இம்மாதிரியான கருத்தரங்கம் போதிப்பதாகவும் ஏற்பாடுகள் செய்த தொகுதி ம இ கா மற்றும் இணைந்து ஏற்பாடுகள் செய்த அனைத்து அரசு சாரா இயக்கங்களையும் பாராட்டுவதாகவும் கூறினார்.

அவருக்கு ஏற்பாட்டுக்குழு தலைவரும், இஸ்கண்டர் புத்ரி தொகுதி துணைத் தலைவருமான தொண்டர்மணி க.சேகரன் அவர்கள் மாலை அணிவித்து சிறப்புச் செய்தார். இந்த கருத்தரங்கில் கலந்த கொண்ட 200 மாணவர்களுக்கும் காலை உணவு, மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் நோட்டுப் புத்தகம், நற்சான்றிதழ் மற்றும் குளிர்பானம் அடங்கிய கைப்பையுடன் அழகிய எழுதுகோலும் நினைவுச் சின்னமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தேசிய புத்ரி தலைவி மற்றும் ஜொகூர் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி திருமதி தீபா, இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற சிறப்பு அதிகாரி திரு மோகன், ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத் துணைத் தலைவர் திரு மாரிமுத்து, தாமான் யூனிவர்சிட்டி மகா மாரியம்மன் ஆலயத் துணைத் தலைவர் திரு கோபால், சுற்று வட்டார பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.


