
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரத்தில் சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.
இந்த ஆலயத்தை மாற்றுவது தொடர்பான பிரச்சினையில் ஈடுபட்டுள்ள தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இதன் மூலம் இப் பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வை உறுதி செய்வதற்கான சிறந்தவொரு வழி தேடப்படுகிறது.
பிரச்சினையை முறையாகத் தீர்க்க, அனைத்து தரப்பினராலும் சிறந்த தீர்வைக் கண்டறிவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
நான் பிரதமர் என்பதற்காக எந்தவொரு கோவிலையோ அல்லது பிற மத நடவடிக்கைகளையோ இடிப்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை என்று அவர் கூறினார்.
ஆலய நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமானது அல்ல. மாறாக 2012 முதல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாகி விட்டது.
உரிமையாளர் அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசல் கட்ட முடிவு செய்துள்ளார்.
இருந்தாலும் கோயில் பழமையானது, அதன் நிலை அங்கீகரிக்கப்படவில்லை, அது சட்டப்பூர்வமானது அல்ல.
ஆனால் உறவு இணக்கமாக இருப்பதை உறுதி செய்வதற்காக நில உரிமை நிறுவனம் சில உதவிகளைச் செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
அதே நேரத்தில் டிபிகேஎல் மாற்று நிலத்தைத் தேடியுள்ளது.இதனால் அது ஒரு பிரச்சனையாக மாறாது என்று தாம் நம்புவதாக பிரதமர் கூறினார்.


