
கோலாலம்பூர் மார்ச் 13
நாட்டில் அடிமட்டத்தில் உருவெடுக்கும் ஒற்றுமை மீதான பிரச்சனைகள் அடையாளம் கண்டு அவை கண்காணிக்கப்பட்டு வருவதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
ஒற்றுமை தொடர்பான பிரச்சினைகளை கையாள தேசிய ஒற்றுமைத்துறை இலாக்காவின் வழி தமது அமைச்சு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் சொன்னார்.
நேற்று 15 ஆவது நாடாளுமன்ற மேலவையின் நான்காம் காலாண்டு முதலாவது கூட்டத் தொடரில் மாட்சிமை தங்கிய பேரரசரின் உரை மீதான விவாதத்தின் போது செனட்டர் டத்தோ ஹாஜி அப்துல் ஹாலிம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
குறிப்பாக e-Sepakat திட்டத்தில் இலக்கவியல் வழி ஒற்றுமை தொடர்பான பிரச்சனைகளை மக்கள் புகார் செய்யலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த திட்டம் ஒற்றுமை தொடர்பான பிரச்சனைகளை சேகரிக்கும் புள்ளிவிவர மையம் என்றார் அவர்.

இந்தத் திட்டத்தில்
ஒற்றுமை தொடர்பான பிரச்சனைகளை கையாள
i) l-kes
ii)I-ramal
iii)l-mediator
ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இருதரப்பினருக்கிடையே கருத்து வேறுபாடு அல்லது சர்ச்சை ஏற்பட்டால் அவற்றிற்கு தீர்வு காண சமூக நடுவர் ஒருவர் நியமிக்கப்பட்டு அப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அவர் சுட்டிக் காட்டினார்
இந்த சர்ச்சை நீதிமன்றம் அல்லது வழக்கறிஞரின் உதவிகளை நாடாத வகையில் சமூக நடுவர் இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அண்டை வீட்டினருக்கிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு இந்த சமூக நடுவர் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் ஏன் அவர் குறிப்பிட்டார். அண்டை வீட்டார், கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் மக்களிடையே நிலவும் பதற்றம் மற்றும் சர்ச்சைகளை பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காண்பதில் இவர்கள் முக்கிய பங்காற்றுவதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டில் ஒற்றுமை பிரச்சனைகளை கையாள ஒரு நடவடிக்கை குழுவை தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு அமைத்துள்ளது.
இந்த நடவடிக்கை குழுவிற்கு அமைச்சின் தலைமைச் செயலாளர் தலைமையேற்று ஒற்றுமை தொடர்பான பிரச்சனைகளை கண்காணித்து வருகிறார்.
இந்த நடவடிக்கை குழுவில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, தேசிய பாதுகாப்பு மன்றம், உள்துறை அமைச்சு, அரசு மலேசிய போலீஸ் படை, தொடர்பு துறை அமைச்சு, தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர், கல்வி அமைச்சு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாக்கா ஆகியவற்றின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.


