Sunday, September 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலேசிய தினத்தை முன்னிட்டுமஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்வழங்கிய வாழ்த்துச் செய்தி.

கோலாலம்பூர் செப் 15

‘நமது இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்!
ஒற்றுமையை நிலை நாட்டுவோம்’
மலேசிய தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழும் அனைத்து மலேசியர்களுக்கும், குறிப்பாக, இந்த ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்கான மாநிலமாகத் திகழும் நமது சரவாக் மாநில மக்களுக்கும் அங்கு வாழும் நமது இந்திய சமூகத்தினருக்கும் மலேசிய தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.
பொதுவாக உலக நாடுகள் பலவற்றிலும் குறிப்பாக முன்னாள் காலனித்துவ நாடுகளில் சுதந்திர தினம் கொண்டாடப்படும். சில நாடுகளில் அந்நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்படும். ஆனால் நம் நாட்டைப் போன்று நாட்டின் தேசிய உணர்வை ஊட்டும் வண்ணம் இரண்டு தினங்களைக் கொண்டாடும் வேறு நாடு இருக்குமா என்பது சந்தேகமே!
கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி நமது நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்த நாம் இன்று செப்டம்பர் 16-ஆம் தேதி மலேசிய தினத்தைக் கொண்டாடுகிறோம். சுதந்திரத்தைப் போன்றே மலேசிய தினக் கொண்டாட்டத்திற்கும் நமது அரசாங்கம் எப்போதும் முக்கியத்துவம் தந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான மாநிலமாக சரவாக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சபா, சரவாக் மாநிலங்களுக்கான வளர்ச்சி மீது நமது தேசிய முன்னணி ஆட்சி காலத்திலும் அதன் பின்னர் அடுத்தடுத்து அமைந்த அரசாங்கங்களும் தனிக்கவனம் செலுத்தின. அதன் காரணமாக சபா, சரவாக் மாநிலங்களின் இயற்கை வளங்களின் மூலம் கிடைத்த வருமானம் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்பட்டது. அதே வேளையில் மத்திய அரசாங்கமும் கோடிக்கணக்கான ரிங்கிட் நிதியை சபா, சரவாக் மாநிலங்களின் மேம்பாட்டுக்குப் பெருமளவில் செலவழித்திருக்கிறது.
இந்த சூழலில் அரசியலில் நம்மிடையே எத்தனையோ கட்சிகள், கூட்டணிகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், தேர்தல்களில் போட்டிகள் இருந்தாலும் நமது நாடு இன்னும் செல்வச் செழிப்புடன் அபரிதமான மேம்பாட்டை நோக்கி முன்னேறிச் சென்று கொண்டிருப்பதற்கான காரணம், நமது மண்ணில் எங்கும் நிறைந்திருக்கும் இயற்கை வளங்களும், நமது மக்களிடையே எப்போதும் காணப்படும் ஒற்றுமை உணர்வும்தான்.
இறைவன் நமக்களித்த இயற்கை வளங்களைத் தொடர்ந்து பாதுகாத்து நமது அடுத்த தலைமுறைகளும் அவற்றை அனுபவிக்கும் வண்ணம் நாம் செயல்படுவோம். பல இன, மதங்களைக் கொண்ட நம் நாட்டில் அவ்வப்போது சிறு பிரச்சனைகள், முரண்பாடுகள் எழுந்தாலும், அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் காவல் துறைக்கும், அரசாங்கத்திற்கும் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். அதேவேளையில் நாட்டின் ஆட்சியாளர்களாகத் திகழும் நமது மேன்மை தங்கிய சுல்தான்கள் அனைவரும் ஒரே இனம், மதம் சார்ந்தவர்களாக இருந்தாலும், மற்ற இனங்களுக்கும் மதங்களுக்குமான சுதந்திரத்தையும் மற்ற இன மக்களின் பாதுகாப்பையும் எப்போதும் உறுதிப்படுத்தி வந்துள்ளனர்.
பலதரப்பட்ட கலாச்சாரங்களையும், மத திருவிழாக்களையும் ஒருசேரக் கொண்டாடும் அபூர்வக் காட்சிகள் அரங்கேறும் உலகின் ஒரு சில நாடுகளில் நம் நாடும் ஒன்று. மக்களிடையே நிலவும் சகிப்புத் தன்மையும் சக இன, மத பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் மதிக்கும் மலேசியர்களின் உயரிய பண்பும்தான் நம் நாட்டை இந்த அளவுக்கு உலக அரங்கில் உயர்த்தியுள்ளது என்பதையும் நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த ஒற்றுமை உணர்வோடு, மலேசிய தினத்தை நாம் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வோம். எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்வோம். அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வைப் பெறுவோம். முன்னேறுவோம்.
அன்புடன்,

டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்
தேசியத் தலைவர்
மலேசிய இந்தியர் காங்கிரஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular