Thursday, August 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கெசியா நிஷா மரணம்: குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அஞ்சும் நிலை ஏற்படக்கூடாது – யுனேஸ்வரன் ராமராஜ்

கோலாலம்பூர் ஆக 20

14 வயதான கெசியா நிஷா என்ற மாணவியின் மரணம் தொடர்பான சம்பவத்தில் எழுந்துள்ள துன்புறுத்தல் மற்றும் இனவாதக் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வர விரும்பவில்லை என்றும், உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தீர்மானிக்க அரச மலேசியக் காவல்துறை (PDRM) பாரபட்சமின்றி முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துன்புறுத்தல், அவமதிப்பு அல்லது இனவாதக் கூறுகள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கல்வி அமைச்சு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“துன்புறுத்தல் வேடிக்கை அல்ல. இனவாதமும் வேடிக்கை அல்ல. எந்தவொரு குழந்தையும் தனது பெயர், நிறம், மொழி, மதம் அல்லது இனப் பின்னணி காரணமாக அவமதிக்கப்படவோ, துன்புறுத்தப்படவோ கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகள் இனவாதத்தைக் கொண்டு பிறப்பதில்லை என்றும், அவர்கள் பெரியவர்களிடமிருந்து கேட்டு, பார்த்து, அதனைப் பின்பற்றுகின்றனர் என்றும் கூறிய யுனேஸ்வரன், பெற்றோர், குடும்பத்தினர், ஆசிரியர்கள், சமூகத்தினர், அரசியல் தலைவர்கள் மற்றும் உள்ளடக்கப் படைப்பாளர்கள் என அனைவரும் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.

பள்ளிகள் கல்வியை வழங்கும் இடமாக மட்டுமின்றி, தேசிய ஒற்றுமையை உருவாக்கும் முதல் தளமாகவும் இருக்க வேண்டும் என்றும், மாணவர்கள் அச்சமின்றி தங்களது பிரச்சனைகளைத் தெரிவிக்கவும், துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்கவும் பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“விசாரணையின் முழுமையான உண்மை இன்னும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு விடயத்தில் நாம் அனைவரும் உடன்பட முடியும்; எந்தவொரு குழந்தையும் தான் யார் என்பதற்காக பள்ளிக்குச் செல்ல அஞ்சக்கூடாது,” என்று யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.

மறைந்த கெசியா நிஷாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்த அவர், பள்ளிகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும், துன்புறுத்தல் தடுக்கப்பட வேண்டும் என்றும், குழந்தைகளின் வாழ்க்கையில் இனவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular